Thursday, 22 August 2024

தமிழ் இலக்கணம் (குற்றியலிகரம்)

          குற்றியலிகரம் :

    குறுமை + இயல் + இகரம் 


      குறுமை என்றால் குறுகிய  என்பது பொருள் .


★      இயல் என்றால் ஓசை என்பது பொருள் .


★      இகரம் என்றால் "இ" என்னும் எழுத்து.


★       எனவே குறுகிய ஓசையுடைய இகரம் குற்றியலிகரம் எனப்படும். 


★       குற்றியலுகரத்தின் உகரம் ஒரு மாத்திரையில் குறைந்து ஒலிப்பது போலவே குற்றியலிகரத்தில் வரும் இகரமும் தன் ஒரு மாத்திரையில் இருந்து அரை மாத்திரை அளவு குறைந்து ஒலிக்கும்.


   ★    நாகு +யாது =நாகியாது 

   ★   வீடு +யாது =வீடியாது


 இச்சொற்களை ஒலித்துப் பாருங்கள்.


    ★    நாகு, வீடு என்பன நெடில் தொடர் குற்றியலுகரச் சொற்கள்.


    ★    இவை நிலை மொழியாய் நிற்க வருமொழியின் முதல் எழுத்து யகரமாக இருப்பின் உகரம் இகரமாகும். இந்த இகரம் தான் குற்றியலிகரம் எனப்படும்.


     ★   அதாவது, நிலைமொழி குற்றியலுகரமாக இருந்து, வரும் மொழி யகரம் வரின், நிலைமொழி உகரம் இகரமாக திரிந்து தன் மாத்திரை அளவில் குறைந்து ஒலிப்பது குற்றியலிகரம் எனப்படும்.


 (எ.கா )

வண்டு +யாது = வண்டியாது 

வரகு + யாது =வரகியாது.


       ★   மியா என்னும் அசைச்சொல்லில் உள்ள இகரமும் (மி = ம்+இ )தன் மாத்திரையில் குறைந்து ஒலிக்கும் . இதுவும் குற்றியலிகரம் எனப்படும்.


( எ.கா) 

            கேண்மியா 

            சென்மியா


"யகரம் வரக் குறல் உத்திரி

                                          இகரமும் 

அசைச்சொல் மியாவின்

                          இகரமும் குறிய "

                                    நன்னூல் ,93

மீண்டும் அடுத்த பதிவில்....



No comments:

Post a Comment

புதிய ஆத்திச்சூடி ( பாரதியார்)

புதிய ஆத்திச்சூடி - பாரதியார் ******************************************   காப்பு  -  பரம்பொருள்  வாழ்த்து:          " ஆத்திசூடி இளம்பி...