வினா வகை
முன்னுரை :
★ என்ன ?
★ எப்படி ?
★ எதற்கு ?
★ எங்கு ?
★ ஏன் ?
என வினாமேல் வினாவை கேட்டு விடை அறிய விரும்புகின்றவனே சிறந்த அறிவாளியாக ஆக முடியும் என்று சாக்ரடீசும், தந்தை பெரியாரும் கூறுவர்.
வினா வகை :
வினா ஆறு வகைப்படும். அவை,
1. அறிவினா
2. அறியா வினா
3. ஐய வினா
4. கொளல் வினா
5. கொடை வினா
6. ஏவல் வினா
1. அறிவினா:
தான் ஒரு பொருளை நன்கு அறிந்திருந்தும் அப்பொருள் பிறர்க்குத் தெரியுமா என்பதனை அறியும் பொருட்டு வினாவப்படும் வினா அறிவினா.
(எ.கா)
★ திருக்குறளை
இயற்றியவர் யார்?
★ சிலப்பதிகாரத்தை
இயற்றியவர் யார்?
என ஆசிரியர் மாணவரிடம் வினவுகிறார்.
விடையை ஆசிரியர் தாம் அறிந்திருந்தும் மாணவர் அறிந்துள்ளனரா என்று அறிய வினவப்பட்டதாகலின் அறிவினா ஆகும்.
2. அறியா வினா:
தான் அறியாத ஒரு பொருளை அறிந்து கொள்வதற்காகப் பிறரிடம் வினவுவது அறியாவினா.
(எ.கா)
★ எட்டுத்தொகை நூல்களுள்
புறம் பற்றியன எவை?
★ ஐயா, இச்செய்யுளின்
பொருள் யாது?
என மாணவர் தான் அறியாத ஒன்றை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்துகொள்ள வினவுவது அறியா வினை ஆகும்.
3. ஐய வினா:
தனக்கு ஐயமாக இருக்கின்ற ஒரு பொருள் குறித்து, ஐயத்தினைப் போக்கிக் கொள்வதற்காக வினவப்படும் வினா, ஐயவினா.
(எ.கா)
★அங்கே கிடப்பது பாம்போ?
கயிறோ?
★இதனைச் செய்தவர்
இராமனா?
இலக்குமணனா?
4. கொளல் வினா:
தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு கடைக்காரரிடம் வினவும் வினா கொளல் வினா.
(எ.கா)
★ வணிகரே! பருப்பு
உள்ளதா?
என வணிகரிடம் வினவுதல்.
பருப்பு இருப்பின் பெற்றுக் கொள்ளும் பொருட்டு கேட்கப்பட்டது ஆதலின் கொளல் வினா ஆகும்.
5. கொடை வினா :
தான் ஒரு பொருளைக் கொடுப்பதற்காக, அப்பொருள் இருத்தலைப்பற்றி பிறரிடம் வினவுவது,கொடை வினா.
(எ.கா)
★ மாணவர்களே!
உங்களுக்கு சீருடை
இல்லையோ?
மாணவர்களுக்கு சீருடை கொடுக்கும் பொருட்டு கேட்கப்பட்டது ஆதலின் கொடை வினா ஆகும்.
6. ஏவல் வினா:
ஒரு தொழிலைச் செய்யும்படி ஏவும் வினா ஏவல் வினா.
(எ.கா)
★மனப்பாடச் செய்யுளைப்
படித்தாயா?
★முருகா சாப்பிட்டாயா?
(இவை படி, சாப்பிடு என்று ஏவல் பொருளைத் தருகின்றன.)
அறிவு, அறியாமை, ஐயுறல்,
கொளல், கொடை,
ஏவல் தரும் வினா ஆறும்
இழுக்கார்
- நன்னூல் 385
மீண்டும்
அடுத்த
பதிவில்,,.......🙏
No comments:
Post a Comment